Published : 25 Mar 2025 06:17 AM
Last Updated : 25 Mar 2025 06:17 AM
சென்னை: சென்னை - மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்த 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை அணி வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவற்றை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், ஐபிஎல் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 4 வழக்குகளை பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார் கோடம்பாக்கம் மணிகண்டன் (29), ராமநாதபுரம் தினேஷ் குமார் (25), தேனி மாவட்டம் பாரதி கண்ணன் (26), கடலூர் மாவட்டம் விஜயகோகுல் (20), சித்தூர் உதய் கிரண் (22), ராயப்பேட்டை விமல்குமார் (26), சிந்தாதிரிப்பேட்டை வாசு (28), அதே பகுதி பவண் (35), தெலங்கானா சந்திரசேகர் (27) ஆகிய 9 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல எழும்பூர் போலீஸார் எழும்பூர், பொன்னியம்மன்கோயில் தெருவில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டல் அருகே கண்காணித்து கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்ததாக அயனாவரம் மோகன் மோத்வானி (33), மயிலாப்பூர் நிரஞ்சன் (29) ஆகிய மேலும் இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் 1,700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.10 ஆயிரம் வரை விலை வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment