Published : 25 Mar 2025 05:05 AM
Last Updated : 25 Mar 2025 05:05 AM
ரூ.80,000-க்காக காவலரை கொன்று, தீவைத்து எரித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் முக்குளம் அருகிலுள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (35). இவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (33) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் திருச்சுழியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே விபத்தில் உடன் வந்த அவரது மனைவி உயிரிழந்தார். விடுமுறையில் இருந்த மலையரசன் மார்ச் 18-ல் மதுரை ரிங்ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
பெருங்குடி போலீஸார் விசாரித்தபோது, அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. மலையரசனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, மதுரை வில்லாபுரம் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் (35) மலையரசனிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது. இக்கொலையில் மூவேந்திரனுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த செய்த போலீஸார் அவரை தேடினர். நேற்று முன்தினம் இரவு மதுரை விமான நிலையம் அருகே மமூவேந்திரன் இருப்பதை உறுதி செய்த போலீஸார் அவரை சுற்றிவளைத்தனர்.
அப்போது, போலீஸாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார் மூவேந்திரன். இதில் சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன் காயமடைந்தார். இதனால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மூவேந்திரன் தப்பி ஓடமுடியாமல் கீழே விழுந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூவேந்திரன், சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரூ.80 ஆயிரத்திற்கா நடந்த கொலை
இது குறித்து தனிப்படை போலீஸார் கூறியது: விபத்தில் சிக்கி காயமடைந்த காவலர் மலையரசனின் மனைவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மனைவியை பார்க்க மலையரசன் அடிக்கடி மதுரை வந்தபோது மூவேந்திரனின் ஆட்டோவை பயன்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது அவசரத் தேவைக்காக மூவேந்திரன் மலையரசனிடம் பணம் வாங்கியுள்ளார்.
கடந்த 18-ம் தேதி மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மலையரசனை மது அருந்தலாம் என மூவேந்திரன் அழைத்துள்ளார். இதையடுத்து இருசக்கர வாகனத்தை மாட்டுத்தாவணியில் நிறுத்திய மலையரசன், மூவேந்திரனின் ஆட்டோவில் சென்றார். அப்போது தனது நண்பர் சிவாவையும்(25) மூவேந்திரன் அழைத்துச் சென்றுள்ளனர்.
விமான நிலையம் அருகே செம்பூரணி வல்லவேந்தல்புரத்தில் சாலையோரம் அமர்ந்து மூவரும் மது அருந்தினர். போதையில் இருந்த மலையரசனின் செல்போனை பார்த்து வங்கி பணவர்த்தனைக்கான பாஸ்வேர்டையும், வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் இருப்பதை மூவேந்திரன் தெரிந்துகொண்டார்.
இதையறிந்து தன்னை தண்டித்ததால் மூவேந்திரன் மலையரசனை கம்பியால் தாக்கினார். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மலையரசன் இறந்தார். பின்னர் நண்பர் சிவாவுடன் சேர்ந்து ஈச்சனேரி பகுதிக்கு மலையரசனின் உடலை கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். பாதி எரிந்த நிலையில் அங்கிருந்து இருவரும் தப்பியுள்ளனர்.
ஏற்கெனவே ரகசிய எண்ணை தெரிந்துவைத்திருந்த மூவேந்திரன், மலையரசனின் செல்போன் மூலம் ரூ.80 ஆயிரத்தை தனக்கு தெரிந்த நபரின் கணக்குக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தனது எண்ணுக்கு மாற்றச் சொல்லி பணத்தைப் பெற்றுக்கொண்டதும் தெரிந்தது.
மலையரசன், மூவேந்திரனின் செல்போன் அழைப்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனை, சிசிடிவி காட்சிகளை வைத்து மூவேந்திரன், சிவா ஆகிய இருவரையும் கைது செய்தோம். இவ்வாறு போலீஸார் கூறினர். இவ்வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடித்த காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட தனிப்படையினரை மதுரை எஸ்பி அரவிந்த் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment