Published : 21 Mar 2025 06:07 AM
Last Updated : 21 Mar 2025 06:07 AM
அரியலூர்: திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் மகன் செந்தில் குமாரவேலு(32). இவருக்கும், அரியலூர் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் கனகவள்ளிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது.
அப்போது, 25 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் 10 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் வாங்க பணம் தருமாறு பெண் வீட்டாரை செந்தில் குமாரவேலு குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அவற்றை பின்னர் தருவதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு, செந்தில் குமாரவேலுவும், கனகவள்ளியும் சென்னையில் வசித்து வந்தனர். அதற்குப் பிறகு நகை, பணம் கேட்டு கனகவள்ளியை, செந்தில் குமாரவேலு, அவரது தாய் கலாவதி(61), தம்பி ஹரிகிருஷ்ண வேலு(30) மற்றும் அவரது உறவினர் முருகன்(51) ஆகியோர் துன்புறுத்தியுள்ளனர்.
இதையறிந்து ராஜேந்திரன் சென்னை சென்றபோது, செந்தில் குமாரவேலு குடும்பத்தினர் அவரை அவமானப்படுத்தி அனுப்பினார்களாம். இதையடுத்து, ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகும், நகை, பணம் வாங்கிவருமாறு கனகவள்ளியை துன்புறுத்தி, அரியலூருக்கு அனுப்பியுள்ளனர்.
தனது தந்தை உயிரிழந்ததற்கும், தனது இறப்புக்கும் செந்தில் குமாரவேலு, கலாவதி உட்பட 4 பேர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2018 ஜூன் 13-ம் தேதி அரியலூரில் உள்ள தனது தாய் வீட்டில் கனகவள்ளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செந்தில் குமாரவேலு, கலாவதி உட்பட 4 பேரையும் அரியலூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.செல்வம், குற்றம் சுமத்தப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment