Published : 20 Mar 2025 01:11 PM
Last Updated : 20 Mar 2025 01:11 PM
கடலூர்: சிதம்பரம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் காவலரை தாக்கிய நிலையில் காவல் ஆய்வாளர் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். திருட்டு வழக்கில் தொடர்புடைய சுடப்பட்ட வரும், அவரால் தாக்கப்பட்ட காவலரும், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் வீட்டில் 10 பவுன் தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் கடந்த 18-ம் தேதி திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் வட்டம், நெல்லியார் கோணம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மகன் ஸ்டீபன் (38) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருட பயன்படுத்தப்பட்ட பொருட்களை அண்ணாமலை நகர் அருகே உள்ள சித்தலாபாடி கிராம சாலையில் உள்ள பனைமரம் அருகே ஒரு முட்புதரில் மறைத்து வைத்திருப்பதாக ஸ்டீபன் தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 20) காலை சுமார் ஆறு மணி அளவில் திருட பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மறைத்து வைத்திருந்த இடத்தில் அந்தப் பொருள்களை எடுப்பதற்காக அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் காவலர்கள் ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் ஸ்டீபனுடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த இரும்பு ராடு, கத்தி, ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட பொருள்களை எடுத்துள்ளனர். அப்பொழுது திடீரென ஸ்டீபன் காவலர் ஞானசேகரனை தாக்கிவிட்டு, காவல் ஆய்வாளர் அம்பேத்கரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் அம்பேத்கர் ஸ்டீபனை துப்பாக்கியால் கால்முட்டியில் சுட்டுள்ளார். இதில் காயத்துடன் கீழே விழுந்த ஸ்டீபன் மற்றும் காயம் அடைந்த காவலர் ஞானசேகரன் ஆகியோரை போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிதம்பரம் பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்டீபன் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். ஸ்டீபன் தமிழகம் முழுவதும் ஒரு நெட்வொர்க் வைத்துக் கொண்டு மிகப்பெரிய திருட்டு செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல கொள்ளையர் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் டிஎஸ்பி லா மேக், அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் காவலர் ஞானபிரகாசம் மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்டீபன் ஆகியோரை சந்தித்து விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment