Published : 20 Mar 2025 09:48 AM
Last Updated : 20 Mar 2025 09:48 AM
மீரட்: ஒருபுறம் ஏஐ தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என்று வளர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்க மறுபுறம் மிகக் கொடூரமான குற்றங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான நடுங்கவைக்கும் குற்றம் ஒன்று உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் நடந்துள்ளது. அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட தங்களின் மகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர் நீதிக் குரல் எழுப்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
‘மருமகனுக்கு நீதி..’ மீரட் நகரைச் சேர்ந்த பிரமோத் - கவிதா தம்பதியின் மகள் முஸ்கான் ரஸ்தோகி. இவர் அதே நகரைச் சேர்ந்த சவுரவ் சுக்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், முஸ்கானுக்கு ஷாஹில் சுக்லா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து சவுரவை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை அம்பலமான நிலையில் தங்களின் மகள் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் மருமகனுக்காக நீதி கோரியுள்ளனர்.
நடந்தது என்ன? சவுரவ் சுக்லா கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் லண்டனில் கப்பல்துறையில் பணி புரிந்துவந்துள்ளார். கடந்த மார்ச் 4-ம் தேதி அவர் மீரட் வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. அவரைக் காணவில்லை எனப் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மீரட் நகர எஸ்பி ஆயுஷ் விக்ரம் சிங் விசாரணை மேற்கொண்டார். அவருக்கு ஆரம்பம் முதலே சவுரவ் மனைவி முஸ்கான் ரஸ்தோகி மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், முஸ்கானிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அப்போது முஸ்கான் அவரது காதலர் ஷாஹில் சுக்லாவுடன் இணைந்து சவுரவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கத்தியால் குத்தி கணவரைக் கொலை செய்ததாகவும், பின்னர் உடலை ஷாஹில் உதவியுடன் துண்டு துனாடக வெட்டி ஒரு ட்ரம்மில் போட்டு அதில் சிமென்ட் கலவையைப் ஊற்றி மூடியதாகவும் கூறினார். இதனையடுத்து போலீஸார் ட்ரம்மில் இருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
‘தண்டனையை நேரலை செய்யுங்கள்’ இதனையறிந்த முஸ்கானின் பெற்றோர் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். முடிந்தால் அவருக்கு வழங்கப்படும் மரண தண்டனையை நேரலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். தங்கள் மருமகன் சவுரவ் சுக்லா மிகவும் நல்ல மனிதர் எனவும் அவருக்கு நேர்ந்த கொடூரம் தங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். முஸ்கான் ரஸ்தோகி அவரது காதலர் ஷாஹில் சுக்லாவைக் கைது செய்த போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அங்கிருந்து அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் அவர்களைத் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment