Last Updated : 19 Mar, 2025 09:04 PM

 

Published : 19 Mar 2025 09:04 PM
Last Updated : 19 Mar 2025 09:04 PM

மதுரை அருகே எரிந்த நிலையில் தனிப்படை காவலர் சடலம் மீட்பு? - உறுதி செய்த உறவினர்கள், திணறும் போலீஸ்

மதுரை: மதுரை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் சிவகங்கை மாவட்ட தனிப்படை காவலர் என உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனாலும், காவல் துறை அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரியைச் சேர்ந்தவர் மலையரசன் (36). சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டாக பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிசெல்வி (33). இவர்கள் இரு குழந்தைகளுடன் சிவகங்கை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்வுக்காக சொந்த ஊருக்கு டூவீலரில் மலையரசன் மனைவியுடன் சென்றுவிட்டு திரும்பினார். மானாமதுரை கட்டனூர் பிரிவில் சென்றபோது, டூவீலர் மீது மற்றொரு வாகனம் மோதியதில் மனைவிக்கு படுகாயம் ஏற்பட்டது.

மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் பாண்டிச்செல்வி உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த சோகத்தில் விடுமுறையில் இருந்த மலையரசன், 2 நாளுக்கு முன்பு தனது டூவீலரில் மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பகுதிக்கு வந்துள்ளார். மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இறப்பு குறித்த சான்றிதழ் விவரம் கேட்க சென்ற நிலையில், அவர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று மதுரை விமான நிலையம் அருகில் ஈச்சனேரி பகுதியில் தீயில் எரிந்த நிலையில் சுமார் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்றை பெருங்குடி போலீஸார் கைப்பற்றினர். விசாரணையில், எரித்துக் கொல்லப்பட்டவர் மலையரசனாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். இருப்பினும், அது மலையரசன் தான் என்று அவரது உறவினர்கள் கூறினர். இந்நிலையில், அவரது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

மலையரசன் பல்வேறு குற்ற வழக்குகளை கையாளும் தனிப்படை காவலர். எனவே, ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மலையரசனை கொன்று எரித்து விமான நிலையம் அருகே உடலை வீசி சென்றிருக்கலாம். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாகவும், அது மலையரசன் தான் என உறுதி செய்த பிறகு கொலையாளிகளை கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை மலையரசனின் உறவினர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மலையரசன் உறவினர்கள் கருப்பையா மற்றும் வழக்கறிஞர் பாஸ்கர் ஆகியோர் கூறும்போது, “மலையரசன் சில மாதத்துக்கு முன்பு சிறந்த பணிக்கான சான்றிதழ் பெற்றவர். இவர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்துள்ளார். வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், மலையரசன் நாடமாட்டத்தை கண்காணித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மனைவி விபத்தில் உயிரிழந்த நிலையில், கணவரும் உயிரிழந்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுதான் காரணம் என்பது தெரிந்தும், எரித்துக் கொல்லப்பட்டவர், மலையரசன் தான் என்பதை உறுதி செய்வதில் போலீஸ் திணறுகிறது. தீவிர விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை போலீஸார் தெரிவிக்க வேண்டும்,” என்றனர். இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது,“கொல்லப்பட்டது மலையரசன்தான் என அவரது உறவினர்கள் உறுதி செய்தாலும், அவர் தான் என்பதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது,” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x