Published : 19 Mar 2025 08:40 PM
Last Updated : 19 Mar 2025 08:40 PM
ஈரோடு: சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பவானி அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சம்பவத்தின்போது காயமடைந்த காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் ஒருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்கியன் ஈரோடு நசியனூர் என்ற இடத்தில் இன்று (மார்ச் 19) காலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை சித்தோடு காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயன் என்பவர் நசியனூர் அருகே வெட்டுக் காயங்களுடன் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
அவர் அளித்த தகவலின்பேரில் பவானி பச்சப்பாளி என்ற இடத்தில் பதுங்கியிருந்த 3 பேரை பவானி டி.எஸ்.பி.ரத்தினகுமார் தலைமையிலான காவல் துறையினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது மூவரும் காவல் துறையினரை தாக்கி தப்பி ஓட முயற்சித்தனர். இதையடுத்து, மூவரையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், சரவணன், பூபாலன் எனத் தெரியவந்தது.
காவல் துறையினர் சுட்டதில் காலில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் ரவி, முதல் நிலை காவலர் லோகநாதன் ஆகிய இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கோவை சரக டிஐஜி சசிமோகன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஐஜி சரவணன் கூறியது: “சித்தோடு காவல்நிலையத்துக்கு உட்பட பகுதியில் கொலை சம்பவம் நிகழ்ந்தது. இதில் சேலத்தை சேர்ந்த ஜான் என்பவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும்போது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரையும் தாக்க முற்பட்டனர். இதனால் தற்காப்புக்காக துப்பாக்கியில் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் கண்காணிப்பு செய்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள நபர்கள் குறித்து விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளைக் கண்காணிக்க தனியாக போலீஸார் பணியில் உள்ளனர். அவர்கள் கண்காணிப்பு செய்து வருகிறார்கள். ரோந்து வாகனமும் இருந்து உள்ளது. கொலைக்கான காரணம் என்ன, எதனால் நடந்தது என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரியும். தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காயம்ப்பட்ட காவலர்கள் நன்றாக உள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment