Published : 25 Feb 2025 07:02 AM
Last Updated : 25 Feb 2025 07:02 AM
சென்னை: ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் மற்றும் வருமான வரித்துறையை தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் 2 மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சத்தை மிரட்டி பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இந்த வழிப்பறிக்கு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய சன்னி லாயிடு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கியிருந்த அவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸார் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் ஆயிரம் விளக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்து வந்ததும், அதன் மூலம் கிடைத்த பணத்தை பங்கிட்டு சொத்துகளை வாங்கி குவித்ததோடு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக, ஹவாலா பணம் கைமாறுவதை நோட்டமிட்டு வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இவர்களது கூட்டாளிகள் வேறு யாரேனும் உள்ளனரா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வணிகவரித் துறை அதிகாரிகள் சுரேஷ் மற்றும் பாபு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment