Published : 23 Feb 2025 06:59 AM
Last Updated : 23 Feb 2025 06:59 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மேலும் 7 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
7 நாள் காவலில் எடுத்தும் விசாரித்தனர். தொடர்ச்சியாக ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்யும் வகையில் அவருக்கு சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் 3 மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு, அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
அப்போது, கடந்த 2022 முதல் 2024-ம் ஆண்டு வரை, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து, காரில் வலம் வந்து அந்த வீடுகளை பல நாட்களாக நோட்டமிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ஞானசேகரன் சிறப்பு புலனாய்வு குழுவிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஞானசேகரனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீஸாருக்கு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பள்ளிக்கரணை போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, ஞானசேகரன் பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் அவர் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்த திருட்டு வழக்குகளில் ஞானசேகரனை கைது செய்து, இதேபோல் வேறு எங்கெல்லாம் அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார், திருடிய நகைகளை வேறு எங்கேயாவது மறைத்து வைத்திருக்கிறாரா என்பது குறித்து பள்ளிக்கரணை துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில், உதவி ஆணையர் கிறிஸ்டியன் ஜெயசீல், காவல் ஆய்வாளர் தீபக் குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...