Published : 17 Feb 2025 06:54 AM
Last Updated : 17 Feb 2025 06:54 AM
திருநீர்மலை: பல்லாவரம் அருகே திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(38). இவர், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் திருநீர்மலை பகுதி பொருளாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இளங்கோ அதே பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது வங்கியின் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து, அடிக்கடி பணம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களும் இளங்கோ அருகில் உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் கேட்கும் போதெல்லாம் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து, பணம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென பெட்ரோல் பங்கிற்கு வந்த இளங்கோ, அங்கு பணியில் இருந்த ரஞ்சித் (32) என்ற ஊழியரிடம், `தனக்கு அவசரமாக ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும். கிரெடிட் கார்டைஸ்வைப் செய்து பணமாக கொடுங்கள்' எனக் கேட்டாராம்.
அதற்கு ஊழியர் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளங்கோ, அவரை சரமாரியாகத் தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டினார். சக ஊழியர்கள் இளங்கோவை பிடிக்க முற்பட்டபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், இதுகுறித்து சங்கர் நகர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், பங்க் உரிமையாளர் ஹரி(42) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற இளங்கோவை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே இளங்கோ, பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்தை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, ``திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தற்போது கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லை'' என செங்கை மேற்குமாவட்ட தலைவர் மின்னர்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment