Published : 27 Oct 2024 05:19 AM
Last Updated : 27 Oct 2024 05:19 AM

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தொழிலாளி: பைக்கில் தப்ப முயன்றவரை விரட்டி பிடித்து கைது செய்த போலீஸார்

சிவகங்கை: சிறுமியை பலாத்காரம் செய்து, கிணற்றில் தள்ளி, தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தொழிலாளியை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

சிவகங்கை அருகேயுள்ள கல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி என்பவரது கிணற்றில் 13 வயது சிறுமியின் சடலம் கிடந்தது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தலையில் காயங்களுடன் இறந்துகிடந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில், டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள வாலான்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் (32) என்பவர் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். பல கிலோமீட்டர் தொலைவு அவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர், அவரை கொலை நடத்த இடத்துக்கு அழைத்துச் சென்றபோதும் தப்பியோடினார். அப்போது போலீஸார் அவரை விரட்டியபோது கீழே விழுந்ததில், அவரது கால் உடைந்தது. காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறும்போது, " சதீஷ்குமார் மீது ஏற்கெனவே சைக்கிள் திருடியதாக 8 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2013-ல் தனது சின்னம்மாவை கொலை செய்த சதீஷ்குமார், 2014-ல் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தார். இந்த வழக்கில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நன்னடத்தையால் 8 ஆண்டுகளிலேயே சிறையில் இருந்து வெளியே வந்த அவர், சீதாலெட்சுமி என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு அக். 2-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

அதே மருத்துவமனையில், தற்போது கொலையான சிறுமியின் தாயாருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்போது அங்கிருந்த சதீஷ்குமார், சிறுமியுடன் பழகியுள்ளார். உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும் என்று கூறி அந்த சிறுமியை சிவகங்கை அருகே கல்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து, அருகேயுள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். அவரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x