Last Updated : 25 Oct, 2024 12:27 PM

 

Published : 25 Oct 2024 12:27 PM
Last Updated : 25 Oct 2024 12:27 PM

போதைப் பொருள் வழக்கில் திடீர் திருப்பம்: முன்னாள் டிஜிபி மகன் சென்னையில் கைது

கோப்புப் படம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் திடீர் திருப்பமாக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஒருவரது மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அரும்பாக்கம், கொடுங்கையூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரியாவைச் சேர்ந்த கபீப் குளோன்ஸ் (32), ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வநாதன் (47) உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புடைய ஒரு கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளின் சந்தை மதிப்பு கிராமுக்கு 2,500 ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கைதானவர்களிடமிருந்து ரொக்கப்பணம், செல்போன்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற முன்னாள் சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யான ரவீந்திரநாத் மகன் அருண் (40) என்பவரும் மவுண்ட் (புனித தோமையர் மலை) போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x