Published : 23 Oct 2024 07:57 PM
Last Updated : 23 Oct 2024 07:57 PM

சொத்துத் தகராறில் உறவினர் கொலை: திருச்சி தம்பதிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: சொத்துத் தகராறில் உறவினரைக் கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா தாளக்குளத்துப்பட்டி வி.பூசாரிபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (55). இவரது மனைவி மாலதி (50). இவர்களது வீட்டுக்கு அருகாமையிலேயே வசித்து வந்தவர், சுப்ரமணியனின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் தங்கபாண்டியன் (23). இவர்களுக்கு இடையே பூர்விக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்துள்ளது.

இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தங்கபாண்டியன் சொத்தை விற்பதற்கு தடையாக இருப்பதாக உணர்ந்த தம்பதியர், அவரை கொலை செய்துவிட்டால் சொத்தை எளிதாக, எந்த பிரச்சினையும் இல்லாமல் விற்றுவிடலாம் என நினைத்துள்ளனர். அதன்படி இவர்கள் கடந்த 18.5.22 அன்று தங்கபாண்டியனை திட்டமிட்டுக் கொலை செய்தனர். இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுப்பிரமணியம், மாலதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாத, பிரதிவாதங்கள் முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.சுவாமிநாதன், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.பி.சக்திவேல் ஆஜரானார். வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் காவல் நிலையத்தின் நீதிமன்றத்துக்கான காவலர் சுகுணா ஆகியோர் வழக்கு விசாரணை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x