Published : 17 Oct 2024 06:56 AM
Last Updated : 17 Oct 2024 06:56 AM

ஆப்பிரிக்காவின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் சென்னையில் பறிமுதல்: விமானத்தில் கடத்திய 2 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஆப்பிரிக்கா நாட்டின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவில் இருந்துகடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்துவிமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிகொண்டிருந்தனர். அப்போது சுற்றுலாப் பயணியாக இங்கு வந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் கொண்டு வந்திருந்தபிளாஸ்டிக் கூடைகளை திறந்து அதிகாரிகள்சோதனை செய்தனர். அதில், ஆப்பிரிக்க நாட்டுபச்சோந்திகள் (Green Iguana) 52 மற்றும் ஜியாமங்க் ஜிப்பான் என்ற ஆப்பிரிக்க கருங்குரங்குகள் 4 உயிருடன் இருந்தன.

இதுபற்றி சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த அதிகாரிகள் உயிரினங்களை ஆய்வு செய்து, அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, உயிரினங்களை வாங்கிச் செல்வதற்காக விமான நிலையம் வெளியே இருந்த ஆண் நபர் ஒருவரும்கைது செய்யப்பட்டார்.

ஆப்பிரிக்கா நாட்டு உயிரினங்களால் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளதால், அந்த உயிரினங்களை மலேசியாவுக்கே விமானத்தில் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x