Published : 09 Oct 2024 05:13 PM
Last Updated : 09 Oct 2024 05:13 PM

உதகையில் வேட்டைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது: துப்பாக்கி, கத்திகள் பறிமுதல் 

உதகை: உதகையில் வேட்டைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உதகை அருகே உள்ள முத்தோரை பாலடா பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்துக்குரிய வகையில் வந்த சென்னை பதிவு எண் கொண்ட காரில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி மற்றும் 7 கத்திகள் இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் காரில் இருந்த ஐந்து பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர்களை இன்று வனத்துறை உதவி வன காப்பாளரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதத் தடுக்க வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பிடிபட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சையது 31, கேரள மாநிலம் நீலம்பூரைச் சேர்ந்த அலி 53, கேரளா மாநிலம் வழிக்கடவைச் சேர்ந்த சாகில் 23, கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹாரிஸ் 22, கேரள மாநிலம் நிலம்பூரைச் சேர்ந்த நவாஸ் 33 என தெரியவந்தது.

இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட உதகைக்கு வந்ததாக தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர்களை இன்று மாவட்ட உதவி வனக்காப்பாளர் மணிமாறனிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் 7 கத்திகள், கார் ஆகியவையும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x