Published : 27 Sep 2024 11:16 AM
Last Updated : 27 Sep 2024 11:16 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து: 3 மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் இருந்து இன்று (செப்.27) காலை 8:20 மணி அளவில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினி பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி புறப்பட்டது. காலை நேரம் என்பதால் பஸ்ஸில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணித்தனர்.

இந்த நிலையில் மினி பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, சாலையை விட்டு பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கூக்குரலிட்டு கதறினர்.

தகவலறிந்து உடனே அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மினி பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 12-ம் வகுப்பு மாணவரான மம்சாபுரம் காந்தி நகர் குருசாமி மகன் நிதிஷ் குமார் (17), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவரான மம்சாபுரம் மீனாட்சி தோட்ட தெரு கோவிந்தராஜ் மகன் சதீஷ் குமார் (20), 10-ம் வகுப்பு மாணவரான மம்சாபுரம் மேலூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வாசுராஜ் (15), கலசலிங்கம் பல்கலைக் கழக ஊழியரான குருசாமி மகன் மாடசாமி (28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறுகலான சாலையில் மினி பஸ் வேகமாக சென்றதால் விபத்து நடந்ததா, அல்லது அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது விபத்துக்குக் காரணமா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x