Last Updated : 25 Sep, 2024 09:28 AM

 

Published : 25 Sep 2024 09:28 AM
Last Updated : 25 Sep 2024 09:28 AM

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று (புதன்கிழமை) அதிகாலை சாலையோர மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று சாமி கும்பிடச் சென்றனர். திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் வேனில் திரும்பிய போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருநாவலூர் போலீஸார் விபத்தில் இறந்தவர்களை முண்டியம்பாக்க அரசு மருத்துவமனைக்கும், காயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

ஆனால் விபத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் நடந்தது எனவே இறந்தவர்கள் உடலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எடுத்து செல்லுமாறு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சடலங்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.

ராமதாஸ் வேண்டுகோள்: இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ”அதிகாலை நேரத்தில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட உறக்கம் தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிகாலை பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் கார், வேன் போன்றவற்றில் இரவு 12 மணிக்கு மேல் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில் ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x