Published : 24 Sep 2024 06:48 AM
Last Updated : 24 Sep 2024 06:48 AM

போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார்: ஸ்ரீரங்கத்தில் கொலை வழக்கில் கைதானவர்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை சந்தித்து ஆறுதல் கூறிய மாநகர காவல் ஆணையர் காமினி. படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்றபோது, அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

ஸ்ரீரங்கம் ரயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ்(33). இவர், 2020-ல் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் ரவுடி தலைவெட்டி சந்துரு(எ) சந்திரமோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டிருந்தார்.

பின்னர் ஜாமீனில் வந்த சுரேஷ்,நேற்று முன்தினம் இரவு மனைவி ராகினியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர்கொண்ட கும்பல், வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவுடி நந்தகுமார் (28), திருவானைக்காவல் ரவுடி ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரன்(36), ஸ்ரீரங்கம் விமல்ராஜ்(24), சூர்யா (என்ற)சூரியபிரகாஷ் (31), பாலகிருஷ்ணன் (29) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், தலைவெட்டி சந்துரு கொலைக்கு பழிக்குப் பழியாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில், கைதான நந்தகுமார் தமிழர் தேசம் கட்சியின் ரங்கம் பகுதி பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரவுடிஜம்பு மறைத்து வைத்துள்ள ஆயு தங்களை கைப்பற்றுவதற்காக அவரை போலீஸார் நேற்று மாலைவாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே சென்றபோது, ரவுடி ஜம்பு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் ரவுடி ஜம்பு.

இதையடுத்து அவரது முழங்கால் நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பின்னர்,காயமடைந்த ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால், ரவுடி ஜம்பு ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி, சிகிச்சை பெற்றுவரும் போலீஸாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார் என காவல் ஆணையர் காமினி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x