Published : 19 Sep 2024 04:52 PM
Last Updated : 19 Sep 2024 04:52 PM

கஞ்சா விற்பனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பல்கலை.யில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிஹார் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், தனிப்படை போலீஸார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணன்கோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ள ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர ஒபுள் என்பவரது மகன் ராஜவிக்ரம் ஆதித்யா (20), பிஹார் மாநிலம் ஆரோரியா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் மகன் ரோகித் குமார் (21) ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து சிறு, சிறு பொட்டலங்களாக இருந்த 550 கிராம் கஞ்சா, எடை மெஷின், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி கல்வி நிலையங்களில் போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளதாக வந்த தகவல் குறித்து விசாரித்த போது, வெளி மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து கஞ்சா கொண்டு வந்து, மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய மாணவர்களை கண்காணித்து வந்ததில், இன்று காலை இருவரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி விடுதியில் தங்காமல், தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்” என்று போலீஸார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x