Published : 14 Sep 2024 06:15 AM
Last Updated : 14 Sep 2024 06:15 AM

சென்னை | வங்கி கணக்குகளில் ரூ.3 கோடி முறைகேடாக பண பரிவர்த்தனை: பள்ளிப்பட்டு அருகே 4 இளைஞர்கள் கைது

சென்னை: வங்கி கணக்குகளில் ரூ.3 கோடி முறைகேடாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்றது தொடர்பாக, பள்ளிப்பட்டு அருகே இரு கிராமங்களைச் சேர்ந்த 4 இளைஞர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள், இளம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களுக்கு சென்றனர். தொடர்ந்து, வங்கிக் கணக்குகளில் அதிக பண பரிவர்த்தனைகள் நடந்தது தொடர்பாக, குமாரராஜபேட்டையைச் சேர்ந்த இளைஞர் தமிழரசன் மற்றும் 2 பெண்கள், மோட்டூரை சேர்ந்த அரவிந்தன், பிரகாஷ் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவர்களை பள்ளிப்பட்டு காவல் நிலையத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். அங்கு விசாரணைக்கு இளைஞர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அவரது தம்பி அஜித் ஆகிய 4 பேரையும் கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

குடிசை வீடுகளில் வசித்து வரும் இளைஞர்கள் சென்னையில் வேலைக்காக அஜ்மல் என்பவரை சந்தித்ததாகவும், அவர் மூலம் மூன்று பேருக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்ட நிலையில் 3 பேர் வங்கி கணக்கில் ரூ.1 கோடி விதம் ரூ.3 கோடி ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

அஜ்மல் ரூ.8 கோடி அளவுக்கு ஹவாலா பணம் மோசடி செய்தது தொடர்பாக ஆந்திர மாநிலம், சீராளா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அஜ்மல், இளைஞர்கள் 3 பேர் வங்கி கணக்கில் ரூ.3 கோடி பரிமாற்றம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நேரில் ஆஜராக இளைஞர்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு, புதுச்சேரி, மும்பை ஆகிய பகுதிகளிகளிருந்து 20 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் பணம் பரிமாற்றம் குறித்து தீவிர விசாரணை நடத்தி இளைஞர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x