Published : 11 Sep 2024 04:07 PM
Last Updated : 11 Sep 2024 04:07 PM

தாம்பரம் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மருத்துவ மாணவி உயிரிழப்பு: மற்றொரு மாணவிக்கு காயம்

வண்டலூர்: தாம்பரம் அருகே மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவிக்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கேளம்பாக்கம் வீராணம் சாலையைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ஷாலினி (20). இவர் வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. கார்டியோ டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் தன்னுடன் படிக்கும் மேடவாக்கம் அருகே ஜல்லடியன் பேட்டையைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் ஸ்வேதா (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் ஷாலினி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். கீழக்கோட்டையூர் அருகே சென்ற போது திருப்போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து இவர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஷாலினி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்வேதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ஸ்வேதா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர். சாலையில் இருந்த மண்ணில் ஷாலினியின் இருசக்கர வாகனங்கள் சிக்கி சறுக்கி விழுந்ததால் பின்னால் வந்த பேருந்தில் முன் சக்கரத்தில் ஷாலினி சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 4 வழிப்பாதை சில இடங்களில் மண் பரவி உள்ளதால், இருவழிப் பாதை போல குறுகி உள்ளது.

இதனால் அடிக்கடி அப்பகுதியில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் இந்த மண் மேட்டை அகற்றும்படி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனாலும் மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் இந்த இடத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.

தேங்கிக் கிடக்கும் மண்ணில் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து பலர் காயமடைகின்றனர். இதற்கு இன்று நடந்த விபத்து ஒரு உதாரணம். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த சாலையில் உள்ள மண்ணை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x