Published : 11 Sep 2024 06:10 AM
Last Updated : 11 Sep 2024 06:10 AM

மும்பை போலீஸ் என கூறி உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு மிரட்டல்: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

சென்னை: மும்பை போலீஸ் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை போனில் மிரட்டிய மர்மநபரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனுஒன்று அளித்தார். அதில், “சென்னை உயர் நீதிமன்ற பெண்நீதிபதி ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன்.

கடந்த 1-ம் தேதி, சம்பந்தப்பட்ட பெண் நீதிபதிக்கு போன் அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை தவறாக சட்ட விரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தி உள்ளீர்கள்.

இது தொடர்பாக மும்பையில்உள்ள அந்தேரி காவல் நிலையத்தில் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். பின்னர், மற்றொரு நபர் வாட்ஸ்-அப் கால் மூலம் தொடர்பு கொண்டு, மும்பை அந்தேரி காவல் நிலைய அதிகாரி பேசுவதாகக் கூறி ஆதார் எண்ணை கேட்டு நீதிபதியிடம் மிரட்டி உள்ளார். எனவே, பெண் நீதிபதியை போலீஸ் என்ற பெயரில் மிரட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டுள் ளார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x