Last Updated : 09 Sep, 2024 08:49 PM

 

Published : 09 Sep 2024 08:49 PM
Last Updated : 09 Sep 2024 08:49 PM

பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை: நாகர்கோவில் காசி ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் கோரி நாகர்கோவில் காசி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர் சமூக வலைதளம் வழியாக நண்பர்களாக பழகிய பெண்களிடம் நெருக்கமாக பழகி ஆபாசம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் காசியை 2020ல் போலீஸார் கைது செய்தனர். பின்னர் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் காசியின் லேப்டாப், செல்போனில் 400 ஆபாச வீடியோக்கள், 1900 நிர்வாணப் படங்கள் இருந்ததை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி காசி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மேலும் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த ஜாமீன் வழங்கக்கோரி காசி, தனி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், "மனுதாரர் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றம் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியுள்ளது.

எனவே ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரருக்கு எதிரான குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மையை கருதி மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x