Published : 01 Sep 2024 05:09 PM
Last Updated : 01 Sep 2024 05:09 PM

உதகையில் இளம் பெண்ணுக்கு சயனைடு கொடுத்து கொலை: கணவர், மாமியார் உட்பட 4 பேர் கைது

உதகை: உதகையில் காபியில் விஷம் கலந்து கொடுத்து இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அப்பெண்ணின் கணவர், மாமியார், கணவரின் தம்பி, சயனைடு வாங்கி கொடுத்த முக்கிய குற்றவாளி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா (50). ஆட்டோ ஓட்டுநர், இவருடைய மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இம்ரான், உதகை வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது - நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்டாரிடம் தெரிவித்தனர்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்த இரு வீட்டார், அதன் பின்னர் சேர்ந்து சம்மதத்துடன் இம்ரான் மற்றும் ஆஷிகா பர்வீன் ஆகியோருக்கு 2021ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிகளுக்கு, தற்போது 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாமியாரான யாஸ்பினுக்கும், மருமகளான ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன் கணவர் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இதைத்தொடர்ந்து உதகை மேற்கு போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், காபியில் அவருக்கு சயனைடு எனப்படும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், வரதட்சனையாக ரூ.20 லட்சம் கேட்டு தராததால் இந்தக் கொடூர செயலில் இளம் பெண்ணின் மாமியார் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யாஸ்பின், இம்ரான், முக்தார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலிப்

இந்நிலையில் நகைக் கடையில் சயனைடு விஷம் வாங்கி கொடுத்த யாஸ்பின் குடும்ப நண்பரான உதகையை சேர்ந்த காலிப் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். நகைக் கடைகளில் சயனைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த சயனைடு அவ்வளவு எளிதாக வெளியில் யாருக்கும் கிடைக்காது. இதை சாப்பிட்டால் அடுத்த ஒரு சில நிமிடங்களில் மரணம் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் காலிப்புக்கு சயனைட் கொடுத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் நகைக்கடை உரிமையாளரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x