Published : 26 Aug 2024 01:21 PM
Last Updated : 26 Aug 2024 01:21 PM

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களை தேடும்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் கிணற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜான் என்ற சாமுவேல் (12). இவர் கோவில்பட்டி லாயல் மில் காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாமஸ் நகரைச் சேர்ந்த ராஜா மகன் ஆகாஷ் (13). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் காலையில் சாமுவேல், ஆகாஷ் ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் கூசாலிபட்டியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். கிணற்றில் குதித்து அவர்கள் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுவர்கள் சாமுவேல் மற்றும் ஆகாஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை கண்ட அவர்களது நண்பர்கள் உடனடியாக இருவரையும் தேடியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்களை மீட்க முடியாததால் உடனடியாக கிராம மக்களிடம் நண்பர்கள் நீரில் மூழ்கிய தகவலை கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி கிணற்றில் மூழ்கிய ஜான் என்ற சாமுவேல் மற்றும் ஆகாஷ் ஆகியோரை மீட்டனர்.

தொடர்ந்து சிறுவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, இறந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x