Published : 18 Aug 2024 03:56 AM
Last Updated : 18 Aug 2024 03:56 AM

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: சென்னை ராயப்பேட்டையில் என்ஐஏ சோதனை

சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் திரட்டிய வழக்கு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.

ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இளைஞர்களை மூளைச் சலவை செய்துவந்ததை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீஸார் கண்டறிந்தனர். அந்த யூடியூப் சேனலில், அத்தகைய வீடியோக்களை பேசி பதிவேற்றம் செய்து வந்தது சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பது தெரியவந்தது.

அவர் ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி அதன் மூலம் ‘ஹிஷாப் உத் தகீர்’ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ரகசிய கூட்டங்களை கூட்டியிருந்ததையும், ராயப்பேட்டை ஜான் ஜானிக்கான் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடைபெறும் அந்த கூட்டத்தில் பங்கேற்கும் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் திரட்டியதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை ‘உபா’ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் சென்றது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 5-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அதனடிப்படையில், சென்னை ராயப்பேட்டை ஜான் ஜானிக்கான் தெருவில் உள்ள ஹமீது உசேன் அலுவலகம், கூட்டங்கள் நடைபெற்ற இடங்களில் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x