Published : 10 Aug 2024 10:49 AM
Last Updated : 10 Aug 2024 10:49 AM

கரூரில் செல்போன் கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், உதிரிப் பாகங்கள் சேதம்

கரூர்

கரூர்: கரூரில் செல்போன் கடையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சேதமாயின. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ராஜேஷ் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றதையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த, பொதுமக்கள் கரூர் தீயணைப்பு படையினர் மற்றும் கரூர் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மளமளவென பரவிய தீயை அணைத்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.

கடையில் செல்போன் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு கடையை பூட்டி சென்ற நிலையில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. செல்போன் பேட்டரி வெடித்த காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x