Published : 09 Aug 2024 02:52 PM
Last Updated : 09 Aug 2024 02:52 PM

மன்னார்குடி அருகே ஜாமீனில் வந்தவர் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை: பழிக்குப் பழி சம்பவம்; போலீஸ் தகவல்

மாரிமுத்து

திருவாரூர்: மன்னார்குடி அருகே, திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபரை இன்று மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நடுவகளப்பால் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து ( 54). இவர் இன்று தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பொருட்களை வாங்குவதற்கு தனது சைக்கிளில் களப்பால் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு வந்த மூன்று நபர்கள், பயங்கர ஆயுதங்களால் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

உடனடியாக கொலையாளிகள் மூவரும் தாங்கள் கொண்டுவந்த இருசக்கர வாகனத்தில், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற களப்பால் போலீஸார், மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவின் சைக்கிள் மற்றும் ரத்த தடயங்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட மாரிமுத்து கடந்த 2011ம் ஆண்டு, திமுக பிரமுகர் பாஸ்கர் (48) என்பவர் கொலையான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதும், மாரிமுத்து சிறைக்குச் சென்றுவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் பாஸ்கரின் உறவினர்களான ராகுல், ராஜன் மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

மாரிமுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்துள்ளார். அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்கள் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் சாலையில் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். ஆனால், கொலையாளிகள் சுதாரித்துக்கொண்டு அவ்வழியைத் தவிர்த்து வேறு மார்க்கத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இருப்பினும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x