Last Updated : 07 Aug, 2024 04:23 AM

 

Published : 07 Aug 2024 04:23 AM
Last Updated : 07 Aug 2024 04:23 AM

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டிய விவகாரம்: 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கோவை: கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் சோதனைகள் நடத்தினர். அதில், கோவையில் நடத்தப்பட்ட சோதனையில், அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்ட மூளைச்சலவை செய்தது உள்ளிட்டவை தொடர்பான வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக என்.ஐ.ஏ சென்னை பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிந்தனர்.

இவ்வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சையது அப்துல்ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோரை தங்களது காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்னர் விசாரித்தனர். அவர்களை கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர். இந்நிலையில், மேற்கண்ட நால்வர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்புநீதிமன்றத்தில் இன்று (ஆக.6) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (ஆக.6) மாலை வெளியிட்ட அறிக்கையில்,‘‘கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத செயல்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்காக ஏமாந்த இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பதில் ஈடுபட்டது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களால் அரபிக் கல்லூரியில் மதப் போதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜமீல் பாஷா அதன் தலைமை புரவலராக இருந்தார். இவர் மாவட்ட அளவில், அரபிக் மொழி மையங்களை பல்வேறு இடங்களில் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில், முகமது உசேன், இர்ஷாத் ஆகியோர் கோவையில் இம்மையங்களை தொடங்கினர். இங்கு தீவிரவாத என்னவோட்டம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஜமீல்பாஷாவின் பதிவு செய்யப்பட்ட உரைகள் ஒளிபரப்பப்பட்டன. கோவையில் கோயிலுக்கு வெளியே தீவிரவாத தாக்குதல் நடத்த ஜிகாதிகளின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டது. சையது அப்துல் ரகுமானால் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்ட ஜமேஷா முபின் கோவை கோட்டைமேட்டில் கார் வெடிப்புச் சம்பவத்தை நடத்தினார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டியது, தீவிரவாத பயிற்சி உள்ளிட்டவை தொடர்பாக சையது அப்துல்ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’’எனக் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x