Published : 03 Aug 2024 06:50 PM
Last Updated : 03 Aug 2024 06:50 PM

ஆயுள் தண்டனைக் கைதி பூவரசியை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆண் நண்பரின் மூன்றரை வயது மகனை கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் விட்டுச் சென்ற வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கும், அவருடன் பணிபுரிந்த பூவரசி என்ற இளம்பெண்ணுக்கும் இடையே கூடாநட்பு இருந்து வந்துள்ளது. இவர்களது விஷயம் அறிந்த மனைவி இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பிறகு மனைவியை சமாதானப்படுத்திய கணவர், பூவரசியை விட்டு விலகியுள்ளார்.

இந்த ஆத்திரத்தில் பூவரசி கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி தனது ஆண் நண்பரின் மூன்றரை வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து மறுநாள் நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் விட்டுவிட்டு வந்துள்ளார். இந்த கொலை வழக்கில் கைதான பூவரசிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் 2021-ம் ஆண்டு அரசாணைப்படி பூவரசியையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது உறவினரான மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரனும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. கோகுல கிருஷ்ணனும் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், "நன்னடத்தை அதிகாரியின் அறிக்கைப்படி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். 14 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துள்ள பூவரசி செய்த தவறுக்காக வருந்தியிருப்பார் என நம்புகிறோம். இந்த சமுதாயத்தில் மீண்டும் அமைதியான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்" என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x