Published : 01 Aug 2024 11:10 PM
Last Updated : 01 Aug 2024 11:10 PM

நாய் குறுக்கே வந்ததால் விபத்து: கார் கவிழ்ந்து 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு @ கேளம்பாக்கம் 

படூர்: கேளம்பாக்கம் அருகே படூர் புறவழிச்சாலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்ற காரின் குறுக்கே நாய் வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 01) மாலை 3.30 மணிக்கு கல்லூரி முடிந்ததும் 4ஆம் ஆண்டு படிக்கும் மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்திற்கு சென்றனர்.

அங்குள்ள ஓட்டல் ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு படூர் புறவழிச்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாணவர் சிவா ஓட்டி வந்துள்ளார். படூர் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது குறுக்கே நாய் ஒன்று வந்ததாக தெரிகிறது. படுவேகமாக வந்ததால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடது புறம் சிவா திருப்பி உள்ளார்.

அப்போது வேகத்தின் காரணமாக நிலை தடுமாறி சாலையை விட்டு இறங்கி காற்றில் பறந்த நிலையில் தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளே விழுந்து நொறுங்கியது. இதில் காரில் இருந்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), திருச்சியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (23) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சிவா (23) மற்றும் மற்றொரு மாணவி அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் (21) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தனர். விபத்து நடந்த சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்றவர்கள் தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கிச் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் (21) என்ற மாணவியும் இறந்தார்.

இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீஸார் கார் சுக்கு நூறாக நொறுங்கிக் கிடந்ததால் கடப்பாரை மற்றும் பல்வேறு சாதனங்களைக் கொண்டு காரை பிளந்து சடலமாக கிடந்த மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அறிந்ததும் அவர்கள் படித்து வந்த கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் திரண்டு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சக மாணவர்களின் உடல்களைக் கண்டு அனைவரும் தேம்பித் தேம்பி அழுதது அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இறந்து போனவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு கதறி அழுதனர். இதனிடையே பள்ளிக்கரணை போக்குவரத்து இணை ஆணையர் சமய் சிங் மீனா, ஐ.ஜி. மகேஸ்வரி, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

காரை ஓட்டி வந்த மாணவர் மது அருந்தி இருந்தாரா என்று விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், காரை ஓட்டி வந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் சிவா சென்னையைச் சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் ஒருவரின் மகன் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x