Published : 18 Jul 2024 08:39 AM
Last Updated : 18 Jul 2024 08:39 AM

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் சகோதரருக்கு அமலாக்க துறை சம்மன்

கோப்புப்படம்

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் டெல்லியில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து,டெல்லி என்சிபி போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், ஜாபர் சாதிக் வீடு, அவரது நண்பர்கள் மற்றும் அவரது அலுவலகம் உட்பட தொடர்புடைய அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. பின்னர், ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் ஜாபக் சாதிக் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ஆவடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் நண்பர் ஜோசப் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக ஜாபர் சாதிக் மனைவியிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள் தற்போது, அவரது சகோதரரும், துணை நடிகருமான மைதீனை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதன்படி, மைதீன் இன்று அல்லது நாளை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x