Published : 18 Jul 2024 09:41 AM
Last Updated : 18 Jul 2024 09:41 AM
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த திருநங்கை சாரங்கன்(32) திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சிமத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனிச் சிறையில் இருந்த இவருக்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மாரீஸ்வரன், பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள், டிஐஜி ஜெயபாரதி ஆகியோரிடம் சாரங்கன் புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்காததால், திருச்சி மாவட்டசட்டப் பணிகள் ஆணையக் குழுவில், தனது வழக்கறிஞர் மூலம் புகார் மனு அளித்தார்.
புகார் குறித்து வழக்கறிஞர் சுப்புராமன் விசாரணை நடத்தியதில், சாரங்கனின் புகார் உண்மைஎன்பது தெரியவந்தது. இதையடுத்து, கைதியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள், டிஐஜி ஜெயபாரதி மற்றும் புகாருக்கு உள்ளான தலைமைக் காவலர் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வர்தயாள் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், டிஐஜி ஜெயபாரதி வேலுார் பயிற்சிப் பள்ளிக்கும், கண்காணிப்பாளர் ஆண்டாள்திருச்சி பயிற்சிப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சாரங்கன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆண்கள் சிறையில் திருநங்கை: வழக்கமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கை மகளிர் சிறையிலும், மற்ற திருநங்கை லால்குடி கிளைச் சிறையிலும் அடைக்கப்படுவர். ஆனால், திருநங்கை சாரங்கன், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாததால், திருநங்கை என்று சொல்ல வேண்டாம் என வற்புறுத்தி, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT