Last Updated : 15 Jul, 2024 07:58 PM

 

Published : 15 Jul 2024 07:58 PM
Last Updated : 15 Jul 2024 07:58 PM

விருதுநகர் அருகே 90 பவுன் நகைகள் திருட்டில் ம.பி.யை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

விருதுநகர் அருகே 90 பவுன் நகை திருட்டில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டுள்ளது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 90 பவுன் நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் தனியார் சிமெண்ட் ஆலையில் துணைப் பொது மேலாளராக (நிர்வாகம்) பணியாற்றி வருபவர் பாலமுருகன் (41). திருநெல்வேலியில் உள்ள தனது தந்தையைப் பார்ப்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் சென்றார். நேற்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, அருகே வசித்து வரும் ஆலை துணைப் பொதுமேலாளர் (தொழில்நுட்பம்) ராமச்சந்திரன் வீட்டு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இவ்விரு வீடுகளிலும் சுமார் 100 பவுன் நகைகள் திருட்டுப்போனதாக கூறப்பட்டது. ஆனால், பாலமுருகன் வீட்டில் மட்டும் 90 பவுன் திருட்டுபோனதும், ராமச்சந்திரன் வீட்டில் நகைகள், பொருள்கள் ஏதும் திருடுபோகவில்லை என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த திருட்டு சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டுள்ளதும், அவர்கள் மத்திய பிரசேதத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் என்பதம் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதில், சஞ்சய் என்பவர் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே அரியலூரில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள சஞ்சய் உள்ளிட்ட 4 பேரையும் வச்சக்காரப்பட்டி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x