Published : 15 Jul 2024 06:59 PM
Last Updated : 15 Jul 2024 06:59 PM

ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தர் மீது கோயில் ஊழியர்கள் தாக்குதல்: போலீஸ் விசாரணை

நிகில் குமார் ஓஜா

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில பக்தர் மீது கோயில் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் குமார் ஓஜா (29). இவர் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார். நிகில் குமார் அவரது சகோதரி நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் சாமி தரிசனம் செய்ய சுவாமி சன்னதியில் வரிசையில் செல்லும் போது அங்கு பணியில் இருந்த கோயில் காவலாளிகள் பெண்களையும் குழந்தைகளையும் விரைவாகச் செல்ல வேண்டும் என விரட்டி உள்ளனர்.

இதனால் காவலாளிகளுக்கும் நிகில் குமார் ஓஜாவிற்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு, பின்னர் அவரை காவலாளிகளும், கோயில் ஆய்வாளரும் தாக்கியுள்ளனர். இதில் அவரது முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நிகில் குமார் ஓஜா ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரத்தம் வரும் அளவுக்கு, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரை தாக்குவது கொடூரச் செயல். தற்போது ராமநாதசுவாமி கோயில் ஊழியர்களாலேயே பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x