Last Updated : 14 Jul, 2024 12:21 PM

 

Published : 14 Jul 2024 12:21 PM
Last Updated : 14 Jul 2024 12:21 PM

ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் கைதான ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை - போலீஸார் கூறுவது என்ன?

என்கவுன்ட்டர் நடந்த இடம் மற்றும் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம்

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில் இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம், சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்றபோது போலீஸாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்த நிலையில் புழல் வெஜிடேரியன் நகரில் காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகள் அடிக்கடி கூடிசதித் திட்டம் தீட்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று என கூறப்படுகிறது. போலீஸார் திருவேங்கடத்தை சுற்றி வளைத்த போது, தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கி சுட்டார்.

இதையடுத்து தனிப்படை காவல் ஆய்வாளர் முகமது புகாரி ரவுடி திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது மார்பில் குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் சுருண்டு விழுந்தார். அவரை மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் என்கவுன்ட்டர் நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடியின் சடலத்தை பார்வையிட்டனர்.

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இதே குன்றத்தூர் திருவேங்கடம், தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான புளியந்தோப்பு தென்னரசு கொலை வழக்கு உட்பட 3 கொலை வழக்குகள் உட்பட மேலும் சில வழக்குகளில் தொடர்புடையவர் என போலீஸார் தெரிவித்தனர்.

உணவு டெலிவரி பாய் போல பெரம்பூர் பகுதியில் பத்து நாட்களாக சுற்றித்திரிந்து ஆம்ஸ்ட்ராங்கின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, கச்சிதமாக கொலை திட்டத்தை செயல்படுத்த முக்கிய பங்கு வகித்தவர் திருவேங்கடம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x