Published : 01 Jul 2024 06:10 AM
Last Updated : 01 Jul 2024 06:10 AM

சென்னை | டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பெட்ரோல், டீசலை நூதன முறையில் திருடிய 6 பேர் கைது

சென்னை: தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற இன்றியமையாத அத்தியாவசிய பொருட்கள் கடத்தல், பதுக்கலை தடுத்தல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கலப்படத்தை தடுக்க தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அப்பிரிவு ஐஜி ஜோஷி நிர்மல் குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் திருவள்ளுர் மாவட்டம், மாத்தூர், டெலிகாம் நகர் அருகே கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை சோதனை செய்ததில் டேங்கர் லாரியிலிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசல்ஆகியவை திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை செய்ததில் எண்ணூர் டேங்க் முனையத்திலிருந்து கல்பாக்கத்திலுள்ள நீலாசாமி ஏஜென்சிக்கு செல்ல வேண்டிய டேங்கர் லாரியை வழியில் நிறுத்திஅதிலிருந்து பெட்ரோல் திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள பேரல்களில் சோதனை செய்ததில் தொழிற்சாலைக்கு பயன்படுத்தக் கூடிய ஆயிலை கள்ளச் சந்தையில் விற்பதற்காக சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார், சீனிவாசன், வேலாயுதம் ஆகியோர் திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோலிய பொருட்கள் சுமார் 16,400 லிட்டர் மற்றும் ஒரு டேங்கர் லாரி, ஒரு டாடாஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x