Published : 22 Jun 2024 04:56 AM
Last Updated : 22 Jun 2024 04:56 AM

கேரளாவில் சமூக வலைதள பிரபலம் தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த நண்பர் கைது

பினாய், ஆதித்யா நாயர்

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த மாணவி ஆதித்யா நாயர்(18). இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார்.

மாணவி ஆதித்யா நாயருக்கும், கேரளாவின் நெடுமங்காட்டை சேர்ந்த பினாய் (21) என்பவருக்கும் சமூகவலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக இணைந்துசமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு கேரளாவின் பிரபல சுற்றுலாத் தலமான வர்க்கலை பகுதிக்கு ஆதித்யா நாயரை, பினாய் அழைத்துச் சென்றார். அங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கிய இருவரும் தனிமையில் இருந்தனர். இதில் ஆதித்யா நாயர் கர்ப்பமானார். பினாயின் நிர்பந்தம் காரணமாக கருத்தடை மாத்திரைகளை அவர் சாப்பிட்டார். இதில் அவரது கரு கலைந்தது. இதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதில் ஆத்திரமடைந்த பினாய், சமூக வலைதளங்கள் மூலம் ஆதித்யா நாயரை மிகவும் மோசமாக விமர்சித்தார்.

இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவேன் என்று பினாய் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ஆதித்யா நாயர் கடந்த 10-ம் தேதிதற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக பினாயை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கேரள போலீஸார் கூறும்போது, ‘‘ஆதித்யா நாயர் மைனராக இருந்த போது அவரைபினாய் பாலியல் வன்கொடுமைசெய்துள்ளார். அவருக்கு மாத்திரைகளை வழங்கி வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளார் வழக்கை முழுமையாக விசாரித்த போது பினாயின் கொடூர முகம் தெரிய வந்தது. தற்போது போக்சோ வழக்கில் அவரை கைது செய்துள்ளோம். நீதிமன்ற அனுமதியுடன் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நீதிமன்றத்தில் முறையிடுவோம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x