Published : 18 Jun 2024 08:18 AM
Last Updated : 18 Jun 2024 08:18 AM

காஞ்சியில் பெண் காவலர் மீது கொடூர தாக்குதல்: கணவர் மீது போலீஸார் வழக்கு

தாக்குதல் நடைபெற்ற இடம் | உள்படம்: டில்லிராணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே பட்டப் பகலில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல் துறை பணியில் கடந்த 2011-ம் ஆண்டு சேர்ந்தவர் டில்லிராணி(33). இவருக்கும், மேகநாதன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுதர்ஷினி(7) என்ற மகளும், சந்திரசேகர்(3) என்ற மகனும் உள்ளனர். விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறார்.

டில்லிராணி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக அவரைப் பிரித்து வாழ்கிறார். விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவர் பணி முடித்துவிட்டு பெரியகாஞ்சிபுரம், சாலைத் தெரு சங்கர மடம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

அப்போது அவரது கணவர் மேகநாதன் அவரை வழிமடக்கி கத்தியால் வெட்டியதில் டில்லிராணியின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பெண் காவலர் டில்லிராணி என்பவர் பட்டப்பகலில் சீருடையில் இருந்தபோதே அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தனிப்பட்ட விரோதத்தால் கணவரே வெட்டியுள்ளதாக செய்திகள் வந்தாலும், உண்மைக் காரணம் என்னவென்பதை காவல் துறை தீர விசாரித்து தொடர்புள்ளோரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காரணம் எதுவாக இருப்பினும், சீருடையில் உள்ள ஒரு காவலரே பட்டப்பகலில் அரிவாளால் தாக்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம். இதற்கு காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தான் சிறப்பாக சட்டம் ஒழுங்கை காத்து வருவதாக கூறி வரும் திமுக அரசின் முதல்வர், இனியாவது அந்த மாய உலகிலிருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x