Published : 11 Jun 2024 01:46 PM
Last Updated : 11 Jun 2024 01:46 PM

மொராதாபாத்தில் இமாம் சுட்டுக்கொலை: உ.பி போலீஸார் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்

மொராதாபாத்: உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் மசூதியில் இமாம் பொறுப்பை கவனித்து வந்த மவுலானா அக்ரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மாவட்டத்தின் மஸ்வாசி கிராமத்தில் உள்ள மசூதியில் அவர் தொழுகையை முன்னின்று நடத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) அதிகாலை 4 மணி அளவில் நடந்துள்ளது.

வீட்டில் இருந்த அவரை யாரோ வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். அதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக மவுலானா அக்ரம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மஸ்வாசி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் மூன்று குழந்தைகளுடன் இருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு யாருடனும் முன்விரோதம் எதுவும் இல்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x