Published : 08 Jun 2024 06:20 AM
Last Updated : 08 Jun 2024 06:20 AM

சென்னை | கே.எம்.சி.க்கு மருந்து வாங்க வந்த 75 வயது மூதாட்டியிடம் பிரதமர் பெயரை சொல்லி நூதனமாக செயின் பறிப்பு

சென்னை: சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா (75). இவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சின்னராஜுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, மாத்திரைகள் வழங்கும் இடம் அருகே நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார். மத்திய அரசின்மக்கள் சேவை மையத்தில் இருந்து வந்திருக்கிறேன். பிரதமர் மோடி, வயதானவர்களுக்கு வரும் 13-ம்தேதி ரூ.10 லட்சம் (வங்கி கணக்கில் செலுத்துகிறார்) தருகிறார். அதனால் இந்த வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுங்கள் என கூறி, 4 இடங்களில் மூதாட்டியிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் மூதாட்டி அணிந்திருந்த ஐந்தே கால் பவுன் தங்க தாலிச் செயினை கழற்றித் தர கேட்டுள்ளார். செயினை எதற்கு கேட்கிறாய் தம்பி என மூதாட்டி கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர், செயினில் ஒரு நம்பர் இருக்கும். அதனை பார்த்து எழுத வேண்டும் என கூறியுள்ளார். மூதாட்டி செயினை கழற்றிக் கொடுத்த சிறிது நேரத்தில் மர்ம நபர் செயினில் ஏதோ தடவி கொடுத்துள்ளார்.

இதை அறியாத மூதாட்டி செயினை வாங்கி கழுத்தில் அணிந்த நேரத்தில் சற்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மர்ம நபர் மூதாட்டியிடம் செயினை கழற்று மாறு மீண்டும் கேட்டுவாங்கி கொண்டு அங்கிருந்து நழுவி உள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி அவரது மகளை வரவழைத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக மோசடி நபரை அடையாளம் காணும் நடவடிக்கையாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x