Last Updated : 07 Jun, 2024 08:56 AM

 

Published : 07 Jun 2024 08:56 AM
Last Updated : 07 Jun 2024 08:56 AM

படாளம் அருகே  விபத்து: சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளத்தில் திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில், சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

சென்னை, போரூர் அடுத்த வளசரவாக்கம், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் (33). இவர் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மேல்மருவத்தூர் கோயிலுக்கு நேற்று சென்றிருந்தார். பின்னர், மீண்டும் வீடு திரும்புவதற்காக உறவினர்களுடன் திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி இன்று அதிகாலை காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, படாளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது பின்னால் கேரட் லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த வினோத்தின் மகன் சச்சின்(7) மற்றும் பார்வதி(70) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ரமணி(52), சாந்தி(50), வினோத்(33), புவனா(30), சிப்பிகா(3) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த நபர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால், திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x