Published : 04 Jun 2024 07:24 AM
Last Updated : 04 Jun 2024 07:24 AM

ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் லாபம் எனக்கூறி வங்கி மேலாளரிடம் ரூ.48 லட்சம் மோசடி

கோப்புப்படம்

கோவை: கோவை வடமதுரை அருகே உள்ள விஎஸ்கே நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (35). தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கோவை கிளை மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் எனது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்ட ஒரு நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக் கூறினார். அதை நம்பி முதலில் ஒரு தொகையை முதலீடு செய்தேன்.

அதைத் தொடர்ந்து, மொத்தம் 13 பணப் பரிவர்த்தனைகளில் அந்நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.48 லட்சத்து 57 ஆயிரத்து 115-ஐ அனுப்பினேன். ஆனால், கூறியபடி எனக்கு லாபத் தொகை கிடைக்கவில்லை. மேலும், நான் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. இதுகுறித்து அந்நபரை தொடர்பு கொண்டபோது, முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற வேண்டும் என்றால், மேலும் கூடுதல் தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறினார்.

அதன் பிறகே, அந்நபர் மோசடியானவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கோவை மாநகர சைபர் கிரைம்போலீஸார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் பண மோசடியில் வங்கி உயர் அதிகாரியே ஏமாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x