Last Updated : 31 May, 2024 03:58 PM

 

Published : 31 May 2024 03:58 PM
Last Updated : 31 May 2024 03:58 PM

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி: தம்பதி உள்ளிட்ட மூவர் கைது

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாககூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெருமாள் சாமி மற்றும் கிருஷ்ணகுமார்

கோவை: கோவையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.22 லட்சத்தை வசூலித்து மோசடி செய்த தம்பதி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அதே பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘நான் சில வாரங்களுக்கு முன்னர் கடையில் வழக்கம் போல் வியாபாரத்தில் இருந்தபோது கருமத்தம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(34), அவரது மனைவி சாய்ஸ்ரீ(24), அவர்களது உறவினர் பெருமாள்சாமி(69) ஆகியோர் வந்தனர். அவர்கள் என்னிடம் வியாபாரம் தொடர்பாக பேசிவிட்டு, எனது மகனின் வேலை தொடர்பாக விசாரித்தனர். நான் அந்த சமயத்தில் எனது மகனுக்கு அரசு வேலை தேடி வந்தேன். இதையறிந்த கிருஷ்ணகுமார் உள்ளிட்ட மூவரும் ரூ.1.60 லட்சம் பணம் கொடுத்தால், எனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்.

இதை நம்பி நானும் ரூ.1.60 லட்சத்தை மூவரிடமும் அளித்தேன். ஆனால், மூவரும் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. அப்போது தான், இவர்கள் மூவரும் மோசடி நபர்கள் என்று தெரிந்தது. இவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், இவர்கள் மூவருமே கருமத்தம்பட்டியில் தங்கி கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, அதில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்றுள்ளனர். அத்துடன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், இவர்கள் மூவரும் 9 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22.50 லட்சம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிருஷ்ணகுமார், சாய் ஸ்ரீ, பெருமாள்சாமி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்தனர்.

இதையறிந்து மூவரும் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த மூவரையும் வெள்ளிக்கிழமை (மே 30) இரவு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x