Published : 31 May 2024 06:06 AM
Last Updated : 31 May 2024 06:06 AM

சென்னை | ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி

சென்னை: சமீபகாலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்கி கும்பல் ஒன்று மோசடி செய்து வந்தது. குறிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகைப்படத்தை பயன்படுத்தி, அவர்களின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களிடம், ‘தற்போது அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது டெபிட் மற்றும் கிரெடிட்கார்டு பழுதடைந்துள்ளது. இதனால் எனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியவில்லை.

எனவே, தற்போது பணம் கொடுங்கள். அடுத்த சில மணி நேரங்களில் அப்பணத்தை திருப்பிகொடுத்து விடுகிறேன்’ என உருக்கமாக தகவல் அனுப்புவார்கள்.

குறிப்பாக மருத்துவம் தொடர்புடையதாக கூறுவார்கள். நமக்கு வேண்டிய உயர் அதிகாரி இப்படி இதுவரை உதவி கேட்டதே இல்லையே. எப்படியாவது நாம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மோசடி கும்பல் கொடுக்கும் வங்கி எண்ணுக்கு அல்லது ஜிபே எண்ணுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி வைத்து விடுவார்கள். அதன் பிறகே அவர்களுக்கு ஏமாற்றப்பட்டது தெரிய வரும்.

அந்த வகையில் தற்போது, மோசடி கும்பல் ஒன்று சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி மோசடிக்கு முயன்று வருகிறது.

இதையறிந்த கூடுதல் காவல்ஆணையர் சுதாகர் அவரது முகநூல் கணக்கு பதிவில், ‘இது ஒரு போலி ஐ.டி. நான் அரிதாகவே நண்பருக்கு கோரிக்கை அனுப்புவேன். யாரிடமும் பணம் கேட்கத்தேவையில்லை. எனவே, தயவுசெய்து இந்த சுயவிவரத்தை ஏற்க வேண்டாம் மற்றும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்’ என அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கிய மோசடி கும்பலை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x