Published : 31 May 2024 06:11 AM
Last Updated : 31 May 2024 06:11 AM

சென்னை | போலீஸ் என கூறி மருந்துக்கடை உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை வீரர் உட்பட 2 பேர் கைது

சென்னை: அயனாவரத்தில் மருந்துக் கடை உரிமையாளரைக் கடத்தி, சிறை வைத்து பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அயனாவரம் பரசுராம ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (50). இவர் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். கடந்த 28-ம் தேதி மாலை 4 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர், தனது தாயாருக்கு இருமல் உள்ளது எனக்கூறி அதற்கான மருந்து பாட்டிலை வாங்கியுள்ளார்.

அப்போது கடைக்குள் நுழைந்த மற்றொரு நபர், தன்னை போலீஸ் என்று கூறிக்கொண்டு, ``பில் இல்லாமல் போதை மருந்துகளை விற்பனை செய்கிறாயா?'' (இருமல் மருந்து மற்றும் வலி நிவாரணிகளை சிலர் போதைக்காக பயன்படுத்துகின்றனர்) எனக்கூறி மிரட்டி கல்லாப்பெட்டியில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை எடுத் துள்ளார்.

அதேசமயம் போலீஸ் எனக்கூறிய நபருடன் வந்த 2 பேர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பிரபாகர னையும் கடையில், இருமல் மருந்து வாங்க வந்த நபரையும் தனியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி தங்களது இருசக்கர வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கொளத்தூருக்கு கடத்திச் சென்றனர்.

அங்குள்ள அடுக்குமாடிக் குடி யிருப்பு ஒன்றில் அவர்களைச் சிறைவைத்து பிரபாகரனிடம் ரூ.80 ஆயிரம்கேட்டு மிரட்டி உள்ளனர். ``பணத்தைக் கொடுக்க மறுத்தால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம். அதைத் தவிர்க்க வேண்டும் என்றால்நாங்கள் கேட்ட பணத்தை உடனடி யாக கொடுக்க வேண்டும்'' என்றனர்.

என்ன செய்வதென்று தெரியாமல் சூழ்நிலை கைதியாகத் தவித்த பிரபாகரன் வில்லிவாக்கம் பகுதியில் தனக்குத் தெரிந்த வட்டிக்கு விடும்நபரிடம் சென்று ரூ.60 ஆயிரம் பணம் பெற்று அதை போலீஸ் என மிரட்டிய கும்பலிடம் கொடுத்துள்ளார்.

அதை பெற்றுக் கொண்ட அக்கும்பல் பிரபாகரனை மீண்டும் அயனாவரம் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதன் பிறகுதான் தன்னை கடத்தி, சிறை வைத்து பணம் பறித்தது ஏமாற்று கும்பல் என பிரபாகரனுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொளத்தூரைச் சேர்ந்த மணி என்ற தினகரன் (26), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முகமது இம்ரான் (27) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில்,தினகரன், ராஜமங்கலம் காவல்நிலையத்தில் ஊர்க் காவல் படை வீரராக உள்ளார். முகமது இம்ரான் இறைச்சிக் கடையில் வேலை செய்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x