Published : 30 May 2024 05:25 AM
Last Updated : 30 May 2024 05:25 AM

புனே விபத்து | மருத்துவமனை டாக்டருடன் 14 முறை செல்போனில் பேசிய சிறுவனின் தந்தை: விசாரணையில் புதிய தகவல்கள்

மும்பை: புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் மருத்துவமனை டாக்டருடன், சிறுவனின் தந்தையும், தொழிலதிபருமான விஷால் அகர்வால் 14 முறை செல்போனில் பேசியது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி 17 வயதுடைய சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் இந்த காரை சிறுவன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது சர்ச்சையானது. இதையடுத்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறார்கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சிறுவனுக்கு கார் வழங்கிய அவரது தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால், சிறுவனுக்கு மது வழங்கியதாக மதுபானக் கூட உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சிறுவனுக்கு பதிலாக குடும்ப டிரைவரை சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத்தாவையும் போலீ ஸார் கைது செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றியதாக சசூன் பகுதிஅரசு மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார், மருத்துவமனை கடைநிலை ஊழியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ரத்தப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவது தொடர்பாக சிறுவனின் தந்தைவிஷால் அகர்வாலும், மருத்துவமனை டாக்டரும் செல்போனில் 14 முறை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இந்த செல்போன் அழைப்புகள் மே 19-ம் தேதி காலை8 மணி முதல் காலை 11 மணி வரைவந்துள்ளன. சாதாரண அழைப்புகளாகவும், வாட்ஸ்-அப், ஃபேஸ்டைம் ஆப்கள் மூலமாகவும் இந்தஅழைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 8.15 மணிக்கு டாக்டர்அஜய் தவாரேவுக்கு முதல்அழைப்பு விஷால் அகர்வாலிடமிருந்து வந்துள்ளது. அப்போதுதான் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிவைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.

இந்நிலையில் விஷால் அகர்வால் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம் தந்தது, சாட்சிகளை கலைக்க முயற்சி செய்ததுஆகிய 2 பிரிவுகளின் கீழ் விஷால்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சிறுவனின் தாத்தா மீது தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறுவன் அதிவேகமாக, கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கார் ஓட்டியது தொடர்பான புதிய வீடியோவும் தற்போது போலீஸார் வசம் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர் ஏற்கெனவே அதிக வேகமாக பல இடங்களில் கார்களை ஓட்டி வந்தது பதிவாகி யுள்ளது. விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நன்கு மது அருந்திவிட்டு அவர் காரை ஓட்டியுள்ளதும், ஓட்டலில் மது அருந்தியதற்காக ரூ.48 ஆயிரத்தை சிறுவன் செலுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் ஏற்கெனவே அதிக வேகமாக கார்களை ஓட்டி வந்தது பதிவாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x