Published : 27 May 2024 06:20 AM
Last Updated : 27 May 2024 06:20 AM

சென்னை | சினிமாவையே மிஞ்சும் வகையில் நூதன மோசடி: கல்லூரி மாணவரிடம் போலீஸ் என கூறி பைக், செல்போன் திருட்டு

சென்னை: வியாசர்பாடியில் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு பொறியியல் கல்லூரி மாணவரிடம் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி, பாரதிநகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் சித்தார்த் (20). பொறியியல் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 24-ம் தேதி மாலை, இருசக்கரவாகனத்தில் வியாசர்பாடி சாந்தி நகர் 3-வது தெருவழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டிப்டாப் ஆசாமி ஒருவர் சித்தார்த்தை வழிமறித்தார்.

தன்னை போலீஸ் என கூறிய அவர், சிறிது தூரம் தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்படி கூறினார். பின்னர், சிறிது தூரம் சென்ற உடன் வீடு ஒன்றை காண்பித்து, அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி இந்த வீட்டிலிருந்து கஞ்சா வியாபாரி யாரேனும் வருகிறார்களா? என சிறிதுநேரம் கண்காணிக்கும்படி கூறி சித்தார்த்தை அங்கு நிற்க வைத்தார்.

மேலும், இருசக்கர வாகனத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு, தனது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகி விட்டது என கூறி செல்போனையும் வாங்கிக் கொண்டு சிறிது நேரத்தில் வருகிறேன் என கிளம்பிச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் போலீஸ் என கூறியவர் வராததால் அதிர்ச்சி அடைந்த சித்தார்த் இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x