Published : 15 May 2024 05:50 AM
Last Updated : 15 May 2024 05:50 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவிக்கு மிரட்டல்: சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை

முன்னாள் அமைச்சர் பொன்னையன்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவிக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பொன்னையன். இவரது மனைவி மருத்துவர் சரோஜா. இவர்கள் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி சரோஜாவின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், ‘மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து பேசுவதாகவும், தான் காவல்துறை அதிகாரி’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “உங்களது ஆதார் கார்டைப் பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று பல லட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் சீன நிதி நிறுவன மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

முதல் கட்டமாக உங்களது ஆதார் கார்டை நிறுத்தி வைத்துள்ளோம். அடுத்ததாக உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய உள்ளோம்” என மிரட்டி உள்ளார்.

அதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்ததுபோல் அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்களை சரோஜா வாட்ஸ்அப்பிலும் அனுப்பி வைத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த மருத்துவர் சரோஜா, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x