Published : 24 Apr 2024 07:09 PM
Last Updated : 24 Apr 2024 07:09 PM

ஆருத்ரா மோசடி வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குநர் ஜாமீன் கோரி மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஆருத்ரா மோடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 23 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 25-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஆருத்ரா நிறுவனத்தில் அலுவலக பணியாளராக இணைந்து கிளைக்கு வருபவர்களிடம் இருந்து பணத்தை வாங்கும் பணியில் மட்டுமே தான் ஈடுப்பட்டேன்.
விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென கைது செய்யப்பட்டேன். எனவே, 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்ப ராஜ் ஆஜராகி, இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x